கிறிஸ்தவ மதம் சொல்லும் செக்ஸ் பற்றிய பத்து கேள்விகளுக்கு பதில்கள்
1 ஆதாம்-ஏவாள் உடலுறவு கொண்டதுதான் ஏதேன் தோட்டத்தில் அவர்கள் செய்த பாவமா?
▪ பதில்: ஆதாம்-ஏவாளுக்குக் கடவுள் தடை செய்திருந்த அந்தப் பழம் நிஜமான பழத்தை அல்ல, அவர்கள் உடலுறவு கொள்வதைக் குறிக்கிறது என்று அநேகர் நினைக்கிறார்கள். ஆனால், பைபிள் அப்படிச் சொல்வதில்லை.
இதைக் கவனியுங்கள்: ஏவாளைப் படைப்பதற்கு முன்பே ஆதாமிடம், “நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை” சாப்பிட வேண்டாம் என்று கடவுள் சொன்னார். (ஆதியாகமம் 2:15-18) அப்போது ஆதாம் தனியாக இருந்ததால், இந்தக் கட்டளை உடலுறவைக் குறிப்பதற்கு வாய்ப்பே இல்லை. இன்னொரு விஷயம்: ‘நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்’ என்ற தெள்ளத்தெளிவான கட்டளையை ஆதாம்-ஏவாள் இருவருக்கும் கடவுள் கொடுத்தார். (ஆதியாகமம் 1:28) எனவே, அன்பான கடவுள் முதல் தம்பதியிடம் ‘பூமியை நிரப்பும்படி,’ அதாவது தாம்பத்திய உறவு கொண்டு பிள்ளைகளைப் பெற்றெடுக்கும்படி, கட்டளை கொடுத்துவிட்டு பின்பு அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்ததற்காக மரண தண்டனையையும் கொடுப்பாரா?—1 யோவான் 4:8.
மற்றொரு விஷயம்: ஏவாள் தன் கணவன் இல்லாத சமயத்தில், அந்த “பழத்தை பறித்து சாப்பிட்டாள். பிற்பாடு தன் கணவனுக்கும் கொடுத்தாள்; அவனும் சாப்பிட்டான்” என்று பைபிள் சொல்கிறது.—ஆதியாகமம் 3:6, NW.
அதன்பின் ஆதாம்-ஏவாள் உறவுகொண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தபோது அதற்காகக் கடவுள் அவர்களைக் கண்டிக்கவில்லை. (ஆதியாகமம் 4:1, 2) அப்படியென்றால், ஆதாம்-ஏவாள் சாப்பிட்ட அந்தப் பழம் உண்மையான ஒரு பழம். அது அவர்கள் இருவரும் உடலுறவு கொண்டதைக் குறிக்கவில்லை என்பதில் சந்தேகமே இல்லை.
2 தாம்பத்திய உறவில் கிடைக்கிற இன்பத்தை அனுபவிக்கக் கூடாது என பைபிள் தடைசெய்கிறதா?
▪ பதில்: கடவுள்தான் மனிதர்களை “ஆணும் பெண்ணுமாக” படைத்தார் என்று பைபிளின் முதல் புத்தகம் சொல்கிறது. அதோடு, தம்முடைய படைப்புகள் எல்லாம், “மிகவும் நன்றாயிருந்தது” என்று கடவுள் சொன்னார். (ஆதியாகமம் 1:27, 31) சில காலம் கழித்து, கணவர்களுக்கு இந்த ஆலோசனையைக் கொடுக்கும்படி பைபிள் எழுத்தாளர் ஒருவரை கடவுள் தூண்டினார்: “உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. . . . அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக.” (நீதிமொழிகள் 5:18, 19) இதைப் படிக்கும்போது, தாம்பத்தியத்தில் கிடைக்கும் இன்பம் தவறு என்று பைபிள் சொல்வதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?
கடவுள் மனிதர்களைப் பால் உறுப்புகளோடு படைத்தது பிள்ளைகளைப் பெற்றெடுப்பதற்காக மட்டுமல்ல, தம்பதிகள் இருவரும் சுகம் பெறுவதற்காகவும்தான். உடல்ரீதியாக, உணர்ச்சிரீதியாக தங்களுக்குள்ள ஆசைகளை அன்பாகவும் ஆனந்தமாகவும் பூர்த்தி செய்ய இது அ