தொடுதல், இன்பத்தின் தொடக்கம்!
நிலவின் குளுமையும் தென்றலின் சிலுசிலுப்பும் இரவு நேரத்தில் உணர்வுகளை வேகப்படுத்தும். அதனால்தான் நிலாச்சோறு சாப்பிடும் வழக்கம் முந்தைய தலைமுறைகளிடம் இருந்தது. இன்றைக்கு எத்தனை குடும்பங்களுக்கு இரவு நேரத்து நிலவும், குளுகுளு தென்றலும் துணையிருக்கின்றன? இயந்திரத்தனமான வேலைப்பளுவுடன் வீட்டுக்குத் திரும்பி, சிறிது நேரம் டி.வி. பார்த்துவிட்டு, இரவு உணவை சாப்பிட்டுவிட்டு, படுக்கையை விரித்து குறட்டை விடுவது வழக்கமாகி வருகிறது. இந்த அவசரகதி என்பது, அடுத்தநாள் வேலைக்கு உதவியாக இருக்கும். ஆனால், நீண்டகால மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இதுதான் எமன்.இரவின் சுகத்தை உணர்வுகளால் அனுபவிக்கத் தெரிந்தவர்கள், பகல்பொழுதில் சுறுசுறுப்பாகப் பணியாற்றி முன்னேறும் இயல்பைப் பெற்றுவிடுவார்கள். படுத்ததும், கண் மூடி குறட்டையில் ஆழ்ந்துபோதல் என்பது ஒருவித நோயின் அறிகுறி.
அலுவலக மேசை போல படுக்கையறையும் கவனத்திற்குரியது. நல்ல காற்றோட்டம் (அது ஏ.சியின் துணையிலும் கிடைக்கலாம்), சுகந்த மணம் வீசும் அறைத் தெளிப்பு(ரூம் ஸ்பிரே), மனதுக்கு இதம் தரும் மென்மையான இசை, அருகில் இருக்கும் துணையின் முகம் தெரிந்தும் தெரியாதபடியான மங்கலான ஒளியில் விளக்குகள் . ஒரு படுக்கையறைக்கான லட்சணங்கள் இவை.
தனிமையில் படித்த புத்தகம்,இருவரும் சேர்ந்து பார்த்த திரைப்படம், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்த நிகழ்வுகள் ஆகியவற்றைப் பேசிக்கொண்டே, தோள் மீது தலை சாய்தல் இருவருக்கிடையிலான நம்பிக்கையை உறுதிப்படுத்தும்.
கன்னங்களில் செல்லக் கிள்ளல், கைக்கும் இடுப்புக்கும் செல்லச் சண்டை, மூக்குகள் இரண்டும் உரசிக் கொள்ளல், உதடும் உதடும் பேசும்மொழி எனத் தொடுதல் நீண்டுகொண்டே போகும்.
எல்லா நாட்களும் மெத்தை மீது தாம்பத்யத்தில் முழுமை கண்டுவிட முடியாது. ஆனால், சின்னச் சின்ன தொடுதல்கள் எல்லா நாட்களிலும் சாத்தியமானது. இந்தத் தொடுதல் உருவாக்கும் நெருக்கத்தால் ஏற்படும் அரவணைப்பில், வெளியில் நிலவுகின்ற குளிரையோ புழுக்கத்தையோ உடல்கள் அறிவதில்லை. உள்ளங்கள் ஒன்றாகும்போது உலகங்கள் மறந்துபோகும்.
இன்ப அதிர்ச்சிகளைத் தரலாம். எதிர்பாராத நேரத்தில் ஒரு நல்ல உடையை பரிசளிக்கலாம். நீண்ட காலமாக கேட்டுவரும் ஒரு பொருளை வாங்கித் தரலாம். காலை நேரத்தில் காபி போட்டு, மனைவியை எழுப்பலாம். (எப்போதும் அதுதானே நடக்கிறது என்கிற கணவர்களுக்கு, மனைவியர் ஏதேனும் ஒரு நாளில் காபி போட்டு எழுப்பி பேரதிர்ச்சி தரலாம்)
தொலைவில் இருந்தாலும் தொடர்பில் இருப்பது முக்கியம். அலுவலகத்திலிருந்து ஒரு எஸ்எம்எஸ், வெளியூரிலிருந்து ஒரு போன்கால், ஃபேஸ்புக்கில் ச்சாட்டிங் என்றபடி, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ எனக் காட்டுங்கள்.
வேலை முடிந்து திரும்பினாலோ, தனியாக வெளியூர் சென்றுவிட்டு வந்தாலோ இருவரும் அவரவர் இடத்தில் என்ன நடந்தது என்பதைப் பகிர்ந்துகொள்ளுங்கள். மொக்கை போடாமல், சுவாரஸ்யமான செய்திகளை சுருக்கமாக சொல்லுங்கள்.
மனநிலையை வெளிப்படுத்தத் தெரியாவிட்டால் மகிழ்ச்சி இல்லை. அன்பை அடக்கி வைக்காதீர்கள். மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளுங்கள். அதுபோலவே மனச்சோர்வு இருந்தால் அதையும் சொல்லிவிடுங்கள். என்னதான் ஈருடல் ஓருயிர் என்று சொன்னாலும் மனது என்பது தனித்தனிதான். அதனால் அதனை வெளிப்படுத்தத் தயங்காதீர்கள்.
தொடுதல், இன்பத்தின் நுழைவாயில். நாடக வசனம் போல எதிரெதிரே நின்று பேசுவதைத் தவிருங்கள். அருகருகில் உட்கார்ந்து பேசுங்கள். கைகளைப் பற்றிக் கொள்ளுங்கள். தோளில் சாய்ந்து அல்லது சாய்த்துக் கொள்ளுங்கள். (மற்றவை உங்களின் வசதியைப் பொறுத்தது). தொடுதலுடன் தொடரும் உரையாடல் என்பது இருவருக்கும் நம்பிக்கையை அதிகரிக்கும்.
வாழ்க்கை எல்லா நாட்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. எனினும், இத்தகைய சின்னச் சின்ன அன்பின் வெளிப்பாடுகள்தான் வாழ்விற்கு எப்போதும் சுவையூட்டுகின்றன.